×

நடிகை கவுதமியின் ரூ.25 கோடி நிலம் அபகரிப்பு அழகப்பன் வீட்டில் போலீசார் சோதனை: 9 அறைக்கு சீல்

காரைக்குடி: நடிகை கவுதமி தனது ரூ.25 கோடி சொத்தை அபகரித்ததாக கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடியை சேர்ந்த தொழிலபதிபர் அழகப்பன் வீட்டில் சென்னை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். வீட்டில் உள்ள 9 அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. சென்னை, அக்கரைபக்தி வேதாந்தா சாமி அவென்யூ, வீரா வில்லாவில் வசித்து வருபவர் நடிகை கவுதமி (54). தனது ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்து, பணம் மற்றும் ஆவணங்களை காரைக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் சி.அழகப்பன் என்பவர் ஏமாற்றிவிட்டார் என, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கவுதமி புகார் அளித்து இருந்தார். சென்னையில் அளித்த புகாரில், ‘‘நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தை கொண்டு சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மருத்துவ செலவிற்காகவும், மகளின் பராமரிப்பு செலவிற்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு காரைக்குடி தொழிலதிபர் சி.அழகப்பன் உதவி செய்வதாக கூறினார். அதனால் எனது நிலங்களை விற்கும் உரிமையை அவருக்கு கொடுத்தேன். ஆனால் பல போலி பத்திரங்களை தயார் செய்து என்னிடம் கையெழுத்து வாங்கி, என்னுடைய சொத்துக்களை அபகரித்து விட்டனர். இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டலும் விடுத்தனர்’’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அன்பழகனுக்கு பாஜவில் உள்ளவர்கள் உதவி செய்வதாக கூறி கடந்த 23ம் தேதி பாஜவில் இருந்து விலகுவதாகவும் கவுதமி தெரிவித்தார். இதுதொடர்பாக கவுதமி வெளியிட்டிருந்த அறிக்கையிலும், ‘‘25 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். பாஜவில் உள்ள மூத்த உறுப்பினர்கள் சிலர் சி.அழகப்பனுக்கு உதவுகின்றனர். இதுதொடர்பாக கட்சி தலைவர்களிடமும் கூறினேன். அவர்களிடம் இருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை. அதனால் விலகுகிறேன்’’ என்று தெரிவித்திருந்தார். சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகை கவுதமி கொடுத்த புகாரின்பேரில் சி.அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது, 5 பிரிவின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின்பேரில் சி.அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சி.அழகப்பனின் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூரில் உள்ள பங்கு வீட்டில் சென்னை குற்றப்பிரிவு டிஎஸ்பி விக்டர் தலைமையில், 2 எஸ்ஐக்கள் மற்றும் 5க்கும் மேற்பட்ட போலீசார், காரைக்குடி தாசில்தார் தங்கமணி மேற்பார்வையில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். காலை முதல் மாலை வரை 8 மணி நேரத்துக்கு மேல் போலீசார் சோதனை நடத்தினர். சோதனை முடிந்ததும் 9 அறைகளுக்கு சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வீட்டில் இருந்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.

The post நடிகை கவுதமியின் ரூ.25 கோடி நிலம் அபகரிப்பு அழகப்பன் வீட்டில் போலீசார் சோதனை: 9 அறைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Gauthami ,Alagappan ,Dinakaran ,
× RELATED இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை கவுதமி புகார்!!